அதிமுகவில் மீண்டும் கட்சி கலகல்! செங்கோட்டையன் நேரடியாக எதிர்த்து, அதிர்ச்சியில் எடப்பாடி!

0305.jpg

சென்னை: அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்தது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெடுஞ்சாலை நகரில் நடந்த சர்ச்சைக்குரிய விவாதம்

இதற்குக் காரணம் கடந்த ஜூலை மாதம் சேலம் நெடுஞ்சாலை நகரில் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடந்த முக்கிய ஆலோசனை கூட்டம் தான் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.பி. அன்பழகன், சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

அந்த சந்திப்பில், “சசிகலா, ஓ.பி.எஸ் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்” என சிலர் வலியுறுத்தினர். இதனால் கட்சியின் தொண்டர்கள் ஆதரவும், நிர்வாகிகளின் ஒற்றுமையும் அதிகரிக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளாமல் தளர்த்தமான நிலைப்பாடு எடுத்ததாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்திலேயே செங்கோட்டையன், சிவி சண்முகம் ஆகியோர் தங்களது கருத்தை கடுமையாக முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி தலைவர்கள் புறக்கணிப்பு?

இந்த விவாதத்திற்குப் பிறகு, செங்கோட்டையன், சிவி சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகியோருக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூடவே, அவர்கள் கட்சி அலுவலக கூட்டங்களில் கூட புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் அதிருப்தியில் செங்கோட்டையன்!

கட்சி செயலில் தன் முக்கியத்துவம் குறைந்ததை உணர்ந்த செங்கோட்டையன், தற்பொழுது ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெறாத நிகழ்ச்சியை காரணமாகக் கொண்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக நடந்த பாராட்டு விழாவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் புகைப்படங்கள் இடம் பெறவில்லை என்பதால், செங்கோட்டையன் அந்த விழாவில் கலந்து கொள்ள மறுத்தார். இது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எடப்பாடியின் முடிவால் அதிமுகவில் விலகல் அதிகரிக்குமா?

முன்னதாக மக்களவைத் தேர்தலில் அதிமுக மோசமான தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கட்சியில் சில தரப்பினர் கூட்டணி மாற்றம், புதிய இணைப்புகள் குறித்து பேசினர். குறிப்பாக, ஒரு முன்னாள் அமைச்சர் பாஜகவுடன் உறவு தொடர வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், செங்கோட்டையன், சிவி சண்முகம் ஆகியோர் சசிகலா-ஓ.பி.எஸ் மீண்டும் கட்சியில் வர வேண்டும் என தீவிரமாக பேசியது, எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த எடப்பாடி பழனிசாமி, கட்சியில் அவர்களுக்கு முக்கியத்துவம் குறைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்து கிளம்பும் அதிமுக சர்ச்சைகள்!

செங்கோட்டையன் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு அதிமுகவின் சில முக்கிய நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இதனால் கட்சியில் மேலுமொரு குழப்பம் உருவாகக்கூடும் எனவும் பேசப்படுகிறது.

இந்நிலையில், கோகுல இந்திரா உள்ளிட்ட மேலும் சில அதிமுக மூத்த தலைவர்கள் விரைவில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அதிமுகவில் ஒரு புதிய அதிகாரப் போராட்டம் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top