சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். அவரை ஜெயலலிதாவின் மருமகள் தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் உள்பட குடும்பத்தினர் வரவேற்றனர்.
இன்று ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்த நாள், இதனை முன்னிட்டு தமிழகமெங்கும் அதிமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விழா கொண்டாடி வருகின்றனர். இதில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார்.
விழாவில், தீபா மற்றும் மாதவன் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பிறகு, நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் பெங்களூர் புகழேந்தியும் உடன் இருந்தார்.
விழாவிற்கு பின், ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம்,
“ஜெயலலிதா உயிருடன் இல்லாவிட்டாலும், அவரின் நினைவு என்றும் நிலைத்திருக்கும். அவரை வேதா இல்லத்தில் மூன்று முறை சந்தித்ததுண்டு,” என நினைவுகூரினார்.
இந்த நிகழ்வின் போது, ரஜினிகாந்த், தீபா, மாதவன் ஆகியோர் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.