காத்மாண்டு: நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு, மக்கள் அச்சத்தில் வீதிகளுக்குத் தஞ்சமடைந்தனர்.
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகவும், நேபாளத்தில் 5.5 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 5.14 மணியளவில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம், 30.08° வடக்கு அட்சரேகை மற்றும் 69.51° கிழக்கு தீர்க்கரேகையில் மையமாக இருந்தது.
இதேபோல், நேபாளத்தில் அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி 27.79° வடக்கு அட்சரேகை மற்றும் 85.75° கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்தது.
தற்போது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. சில தினங்களுக்கு முன்பும் பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.