சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார். “பாசிசமா, பாயாசமா என ஒருவர் சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார். இது ஒரு ஆபத்தான பேச்சாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், அவர் கூறுகையில், “முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராடினார். ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தில் அந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றினார்,” என்றார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “முதல்வர் ஸ்டாலின் திமுக கொடியைப் பிடித்து பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழியில் வளர்ந்து, இன்று தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுகிறார்,” என்றார்.
அதேபோல், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “தமிழ்நாடு அரசு ‘அப்பா’ எனும் செயலியை அறிமுகம் செய்து, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. பெற்றோர் கூட குழந்தைகளுக்கு இதனை வழங்க முடியாது. ஆனால், முதலமைச்சர் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளார்,” என்று பாராட்டினார்.
இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் பேசினர்.