Naan Mudhalvan Success – 50 பேர் வெற்றி: நான் முதல்வனின் சாதனைப் பட்டியல்!
Naan Mudhalvan Success -லட்சக்கணக்கானோர் வாழ்வில் ஒளியேற்றிடும் நான் முதல்வன் திட்டம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
2024 ஆம் ஆண்டுக்கான யுனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
இந்த மதிப்புமிக்க தேர்வில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி சக்தி துபே முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
செல்வி ஹர்ஷிதா கோயல் இரண்டாம் இடத்தையும், திரு. டோங்க்ரே அர்ஷித் பராக் மூன்றாம் இடத்தையும் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும், அகில இந்திய அளவில் அவர் 23-வது இடத்தைப் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இவர் தமிழக அரசின் தொலைநோக்குப் பார்வையிலான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.
மேலும், இந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற 134 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றிருந்தனர்.
அவர்களில் 50 பேர் தற்போது இறுதிப் பட்டியலில் வெற்றிக் கொடியை நாட்டியுள்ளனர்.
இந்த 50 சாதனையாளர்களில் 18 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் முழு நேர உறைவிடப் பயிற்சி பெற்றவர்கள் என்பது மேலும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தமிழக அரசின் இந்த முன்மாதிரியான பயிற்சித் திட்டம், மாநில மாணவர்களின் திறமையை வளர்த்து தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற உறுதுணையாக இருப்பது இந்த முடிவுகளின் மூலம் தெளிவாகிறது.
யூ.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உண்மையான மகிழ்ச்சி எது?… நான் மட்டும் முதல்வன் அல்ல.
என் பிறந்தநாளில் நான் தொடங்கி வைத்த ‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக பயிற்சி பெற்ற மாணவர், இன்று யூ.பி.எஸ்.சி. தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்திருப்பது என் உள்ளத்தை பூரிப்பில் ஆழ்த்துகிறது.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மெருகேற்றும் இந்தத் திட்டம், வருங்காலத்தில் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் ஒளியேற்றும் என்ற நம்பிக்கை, என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரின் இந்த பதிவு, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் நோக்கத்தையும், அதன் வெற்றியையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.