சாம்சங், மோட்டோரோலா போன்களில் ஜெமினி-க்கு பதிலாக பெர்ப்ளெக்ஸி ஏஐ? பரபரப்பு தகவல்! – Perplexity AI
Perplexity AI – சாம்சங் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் தங்கள் போன்களில் கூகிள் ஜெமினிக்கு பதிலாக பெர்ப்ளெக்ஸி ஏஐயை இயல்புநிலை உதவியாளராக சேர்க்க பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இந்த மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.
பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், சாம்சங் மற்றும் மோட்டோரோலா போன்களில் பெர்ப்ளெக்ஸி ஏஐ முதன்மை ஏஐ உதவியாளராக இருக்கும். இது ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புதிய திருப்பமாக அமையும்.
Samsung-Google உறவில் சிக்கல்?
சாம்சங்குடனான கூகிள் ஒப்பந்தம் சிக்கலானதாக இருந்தாலும், சாம்சங் நிறுவனம் பெர்ப்ளெக்ஸியுடன் நல்லுறவைப் பேணி வருகிறது.
கடந்த ஆண்டு சாம்சங்கின் முதலீட்டுப் பிரிவு பெர்ப்ளெக்ஸியில் முதலீடு செய்தது.
தற்போது பெர்ப்ளெக்ஸி புதிய நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், சாம்சங் மேலும் முதலீடு செய்யக்கூடும். இது சாம்சங்-கூகிள் உறவில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம்.
Perplexity AI-ன் தனித்துவம் :
பெர்ப்ளெக்ஸி ஏஐயின் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், இது 2022-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
மிக முக்கியமாக, உடனுக்குடன் தகவல்களை வழங்கும் திறன், வழக்கமான தேடுபொறி போன்ற எளிமையான இடைமுகம், மற்றும் ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆற்றல் ஆகியவற்றுக்காக இது தனித்து விளங்குகிறது.
மேலும், கடந்த மார்ச் மாதத்தில், பெர்ப்ளெக்ஸி நிறுவனம் ஜெர்மனியின் டெலிகாம் ஏஜி நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த அதிநவீன போன் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட்டு, 2026-ம் ஆண்டு சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் மற்றும் மோட்டோரோலா போன்ற பெரிய ஜாம்பவான் நிறுவனங்கள் பெர்ப்ளெக்ஸி ஏஐயை தங்கள் ஸ்மார்ட்போன்களின் இயல்புநிலை உதவியாளராக மாற்றும் முடிவு, ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இது நீண்ட காலமாக செயற்கை நுண்ணறிவு சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் கூகிள் நிறுவனத்திற்கு ஒரு வலுவான போட்டியாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.