You are currently viewing Robot Police  | ரோபோ போலீஸ்  : பாதுகாப்பு கவசம்!

Robot Police | ரோபோ போலீஸ் : பாதுகாப்பு கவசம்!

0
0

பெண்கள் பாதுகாப்புக்கு களம் இறங்கும் ‘ரோபோ’ போலீஸ் – என்னென்ன வசதிகள்? – Robot Police

Robot Police  – நவீன தொழில்நுட்ப வளர்ச்சியையொட்டி, சென்னை காவல் துறையும் புதிய புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. இதன் உச்சமாக, பெண்கள் பாதுகாப்பிற்காக ‘ரோபோ’ காவலர் அறிமுகப்படுத்தப்பட உள்ளார்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை காவல் ஆணையர் அருண் அவர்களின் உத்தரவின்படி, பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் பொது இடங்கள், சில குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களிலும் அவசர கால காவல் உதவிக்காகவும், பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாகவும் ‘சிவப்பு பொத்தான் – ரோபோ காப்’ (ரோபோ காவலர்) அறிமுகம் செய்யப்படவுள்ளது.

என்னென்ன வசதிகள்?

இந்த அதிநவீன பாதுகாப்பு கருவியில், 24 மணி நேரமும் முழுமையான 360 டிகிரி கோணத்தில், பல மீட்டர் தூரம் வரை துல்லியமான கண்காணிப்பு பதிவுகள் மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நேரடி ஒளிக்காட்சி பதிவு, இருவழி குரல் தொடர்பு பதிவுகள், அவசர நிலையில் பொதுமக்கள் காவல் துறையினருடன் நேரடியாக உரையாடும் திறன், அபாய அறிவிப்பு ஒலி எழுப்பும் வசதி, மேம்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட வீடியோ கேமரா மற்றும் நுண்ணிய ஒலிவாங்கி.

ஜி.பி.எஸ். புவியிடங்காட்டி அமைப்பு, மக்கள் எங்கிருந்தாலும் ஒரு அழைப்பின் பேரில் விரைந்து உதவிடும் உடனடி நடவடிக்கைகள், உயிர்காக்கும் முதலுதவிக்கான தகுந்த பயிற்சி பெற்ற காவல் துறையினரைக் கொண்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

இந்தக் கருவியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை ஆபத்தில் சிக்கிய நபர் அல்லது அவருக்காக மற்றொருவர் அழுத்துவதன் மூலம் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் சென்றடையும்.

மேலும், அருகில் இருப்பவர்களுக்கு அபாயத்தை உணர்த்தும் வகையில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். துன்பத்தில் உள்ளவர் வீடியோ அழைப்பு மூலம் நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள முடியும்.

ரோந்து வாகனத்தில் இருக்கும் காவல்துறையினர் அந்த வீடியோ அழைப்பின் மூலம் சம்பவ இடத்தின் நிலவரத்தை அறிந்து விரைவாக வந்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

கேமரா பதிவுகள் மூலம் சம்பவங்களை முழுமையாக ஆராய்ந்து புலன் விசாரணையைத் தொடங்கி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் இதில் உள்ளன.

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட 12 காவல் மாவட்டங்களையும் உள்ளடக்கிய 4 மண்டலங்களில், ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 50 இடங்கள் வீதம் மொத்தம் 200 காவல் ரோபோ சாதனங்களை நிறுவுவதற்கான கள ஆய்வுகளை காவல் அதிகாரிகள் மேற்கொண்டு தகவல்களை சேகரித்துள்ளனர்.

சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புக்காக இந்தக் காவல் ரோபோ சாதனங்கள் வருகிற ஜூன் மாதம் முதல் நிறுவப்பட உள்ளன.”

இந்தச் செய்தி, சென்னை காவல் துறை பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தவுள்ள ‘சிவப்பு பொத்தான் – ரோபோ காப்’ எனப்படும் ரோபோ காவலர்கள் பற்றியது.

இந்த ரோபோக்களில் உள்ள 360 டிகிரி கண்காணிப்பு, நேரடி வீடியோ மற்றும் ஆடியோ தொடர்பு, அவசர உதவிக்கான சிவப்பு பொத்தான், ஜிபிஎஸ் மற்றும் முதலுதவி வசதிகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் விளக்கப்பட்டுள்ளன.

மேலும், இவை ஜூன் மாதம் முதல் சென்னை நகரின் முக்கிய இடங்களில் நிறுவப்படவுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply