நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு சிறுமி உயிரிழப்பு – Stray Dog Bite Death
Stray Dog Bite Death – கேரள மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
குறிப்பாக, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தெருநாய்களின் அட்டூழியம் தலைவிரித்தாடுகிறது.
இதன் விளைவாக, அப்பாவி குழந்தைகள் தெருநாய்களின் தாக்குதலுக்கு இலையாகும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், மலப்புரம் மாவட்டம் தேஞ்சிப்பாலம் பெருவள்ளூர் காக்கத்தடம் பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி சியா பாரிஸ், தெருநாய் கடித்ததன் காரணமாக வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி சியா, சல்மானுல் பாரிஸ் என்பவரின் மகளாவார். கடந்த மாதம் 29-ஆம் தேதி, தனது வீட்டின் அருகே இருந்த கடைக்கு இனிப்பு வாங்கச் சென்றபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு தெருநாய் அவளை துரத்தி கொடூரமாக கடித்துள்ளது.
இந்த துயரச் சம்பவத்தில், சிறுமியின் தலை மற்றும் கால் போன்ற இடங்களில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன.
சியாவை காப்பாற்ற முயன்ற பெண் உட்பட மேலும் ஐந்து பேரையும் அந்த வெறிநாய் விட்டுவைக்கவில்லை.
நாய் கடித்தவுடன், சிறுமி உடனடியாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.
அங்கு அவளுக்கு வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டது.
அதே நாளில், சிறுமி உட்பட ஆறு பேரை கடித்த அந்த தெருநாய் மாலையிலேயே இறந்துவிட்டது.
தொடர்ந்து சியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, வெறிநாய்க்கடிக்கான அனைத்து தடுப்பூசி மருந்துகளும் முறையாக செலுத்தப்பட்டன.
இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, சியா வீடு திரும்பினாள்.
மருத்துவர்களின் அறிவுரையின்படி வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், சிறுமிக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.
மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சியாவிற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், வெறிநாய்க்கடியின் தாக்கம் (ரேபிஸ்) இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி சிறுமி சியா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தாள்.
வெறிநாய்க்கடிக்கான அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டும் சிறுமி உயிரிழந்தது, அவளது குடும்பத்தினரை மட்டுமல்லாது, அப்பகுதி மக்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த துயரமான சம்பவம், மலப்புரம் பகுதியில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.