சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் இன்று (அக். 14) தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. சபாநாயகர் எம். அப்பாவு தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (அக். 17) வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன், கே. என். நேரு, அதிமுக கொறடா எஸ். பி. வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கும், நாகாலாந்து ஆளுநர் மறைவுக்கும் சட்டப்பேரவையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்,” என தெரிவித்தார்.
மேலும், பா.ம.க. தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் தன்னுடைய பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் கூறினார். அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பங்கேற்றதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு கூடும் இம்முறை சட்டப்பேரவைக் கூட்டத்தில், கரூர் கூட்ட நெரிசல், கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கேள்விகளை எழுப்ப வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த கூட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
Summary:
The Tamil Nadu Legislative Assembly convenes today amid a charged political climate. The session will open with condolence resolutions for the Karur crowd tragedy and the demise of the Nagaland Governor.