சென்னையின் தி.நகர் பகுதியில் அமைந்துள்ள அகரம் அமைப்பின் புதிய அலுவலகம் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிவகுமார், சூர்யா, கார்த்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உருக்கமாக பேசிய சூர்யா,
“ஒரு சின்ன விதையாக தொடங்கிய ‘அகரம்’ இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளது. 2006-ல் ‘கஜினி’ திரைப்படம் முடிந்தவுடன், இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. இயக்குநர் ஞானவேல் கேட்ட ஒரு கேள்வியிலிருந்தே ‘அகரம்’ தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் 10 மாணவர்களுக்காக 10 அறைகளில் தொடங்கிய பயணம், இன்று 700 மாணவ-மாணவியர்களை கல்வியளிக்க முடியும் அளவுக்கு வளர்ந்துள்ளது.”
அத்துடன்,
“இந்த ஆண்டும் 10,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் பலர் பொருளாதாரக் காரணங்களால் கல்வியை தொடர முடியாமல் தவிக்கிறார்கள். 20 வருடங்கள் கடந்துவிட்டாலும், ‘அகரம்’ இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். அதற்காக முன்னாள் மாணவர்களும் சமூகத்துக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்.”
சூர்யா மேலும் கூறியதாவது:
“இந்த கட்டிடம் எந்த நன்கொடையாலும் உருவாக்கப்படவில்லை. இது என் சொந்த வருமானத்தால் உருவானது. நன்கொடைகள் அனைத்தும் முழுக்க முழுக்க மாணவர்களின் கல்விக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.
‘அகரம்’ வெறும் அலுவலகம் அல்ல, புத்தக வெளியீட்டு விழாக்கள், பயிற்சி பட்டறைகள், வாசிப்பு கூடங்கள் என நல்ல மாற்றத்திற்கான இடமாக இது செயல்படும்.
சொந்த வீடு கட்டிய மகிழ்ச்சியை விட, இந்த கட்டிடம் அமைந்த மகிழ்ச்சி அதிகம் என்று உணர்கிறேன்.”
சூர்யாவின் இந்த உருக்கமான பேச்சு, அகரம் அறக்கட்டளையின் சமூகப்பணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருந்தது.